பிறந்த நாட்டிற்குத் திரும்புமாறு கொடுக்கப்படும் அழுத்தம் Pressure to return to country of origin
கட்டாயப்படுத்தப்பட்ட நாடு திரும்புதல்
வெளிநாட்டுத் தலையீட்டில் ஈடுபடும் வெளிநாட்டு அரசுகள், தனிநபர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நியூசிலாந்தை விட்டு வெளியேறி, அவர்கள் பிறந்த நாட்டிற்கே திரும்புமாறு வற்புறுத்தலாம் அல்லது கட்டாயப்படுத்தலாம். இது கட்டாயப்படுத்தப்பட்ட நாடு திரும்புதல் என்று அழைக்கப்படுகிறது.
இதைச் செய்வதற்கு, ஒரு வெளிநாட்டு அரசு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்:
- தனிநபர்கள், அவர்களது குடும்பத்தினர் அல்லது நண்பர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அவர்கள் பிறந்த நாட்டிற்குத் திரும்புமாறு அழுத்தம் கொடுக்கவும் பயணத் தடைகளை விதிக்கலாம்.
- அவர்கள் பிறந்த நாட்டில் உள்ள அவர்களது நிதிச் சொத்துகளை முடக்கலாம்.
- அவர்கள் பிறந்த நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது உறவினர்களைத் துன்புறுத்தலாம் அல்லது அச்சுறுத்தலாம், அல்லது அந்த நபரை மீண்டும் நாட்டிற்கு வருமாறு வற்புறுத்துவதற்கு அவர்கள் மீது அழுத்தம் கொடுக்கலாம்.
வெளிநாட்டுத் தலையீட்டிற்கு இலக்காகும் பெரும்பாலானோர் இத்தகைய கட்டாயப்படுத்தப்பட்ட நாடு திரும்புதல் சூழலை எதிர்கொள்ள மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
நாடுகடத்துதல்
நாடுகடத்துதல் என்றால் என்ன?
நாடுகடத்துதல் என்பது ஒரு நபர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அல்லது அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை அனுபவிக்க, அவரைத் திருப்பி அனுப்புவதற்காக நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்படும் ஒரு முறையான சட்டபூர்வமான நடைமுறையாகும். நியூசிலாந்தின் நாடுகடத்தல் நடைமுறைகள் நாடுகடத்தல் சட்டம் 1999-இல் விவரிக்கப்பட்டுள்ளன.
சட்டபூர்வமான நாடுகடத்துதல் என்பது வெளிநாட்டுத் தலையீட்டின் ஒரு வடிவம் அல்ல.
எப்போது நாடுகடத்தக் கோரலாம்?
ஒருவர் மீது அவர் பிறந்த நாட்டில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது அவர் தனது தண்டனைக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யாமல் இருந்தாலோ, அவர் தற்போது வசிக்கும் நாட்டிற்கு அந்த நாடு நாடுகடத்தல் கோரிக்கையை' விடுக்கலாம்.
நாடுகடத்தல் கோரிக்கையை விடுக்கும் ஒரு நாடு, சர்வதேச ஒப்பந்தத்தின் அடிப்படையிலோ அல்லது சம்பந்தப்பட்ட நாட்டின் உள்நாட்டுச் சட்டத்தின் அடிப்படையிலோ அக்கோரிக்கையை முன்வைக்கலாம். நியூசிலாந்திடம் இருந்து ஒருவரை நாடுகடத்தக் கோருவதற்கு, அந்த நாட்டுடன் நியூசிலாந்து ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்று நாடுகடத்தல் சட்டம் கூறுகிறது.
நாடுகடத்தல் கோரிக்கை என்பது, சம்பந்தப்பட்ட நபரை அவர் பிறந்த நாட்டில் விசாரணைக்கு உட்படுத்தவோ அல்லது மீதமுள்ள தண்டனையை அனுபவிக்கவோ கைது செய்து திருப்பி அனுப்புவதற்காகச் செய்யப்படும் ஒரு விண்ணப்பமாகும்.
நியூசிலாந்து நாடுகடத்தல் கோரிக்கைகளை எவ்வாறு கையாள்கிறது
நியூசிலாந்தில், பிற நாடுகள் விடுக்கும் நாடுகடத்தல் கோரிக்கைகள் நியூசிலாந்து அரசாங்கத்தாலும் நீதிமன்றத்தாலும் பரிசீலிக்கப்படுகின்றன.
நாடுகடத்தல் கோரிக்கைகள் அரசியல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்டால், அக்கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும் என்று நியூசிலாந்து சட்டம் வலியுறுத்துகிறது.
இதில் ஒரு நபர் அவரது இனம், இனக்குழு, மதம், தேசிய இனம், பாலினம் அல்லது இதர தகுதி நிலைகள், அல்லது அரசியல் கருத்துகளின் காரணமாக அவரைத் தண்டிக்கும் நோக்கில் அவர் மீது வழக்குத் தொடரப்படுதல், அல்லது அரசியல் ரீதியான ஒரு குற்றத்திற்காக (ஒருவரின் அரசியல் கருத்துகள் அல்லது செயல்பாடுகளுடன் தொடர்புடையவை போன்றவை) அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுதல் ஆகியவை அடங்கும்.
மேலும், ஒரு நபர் மீதான குற்றச்சாட்டு நல்லெண்ணத்தின் அடிப்படையில் அமையாமலோ அல்லது நீதியின் நலனுக்குப் புறம்பாகவோ இருந்தால், வெளிநாட்டின் நாடுகடத்தல் கோரிக்கையை நியூசிலாந்து நிராகரிக்க முடியும். அனைத்துச் சூழல்களையும் கருத்தில் கொள்ளும்போது, அந்த நபரை மீண்டும் திருப்பி அனுப்புவது அநீதியானது அல்லது ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவது என்று கருதப்பட்டால் அக்கோரிக்கை நிராகரிக்கப்படலாம்.
நியூசிலாந்தில் நாடுகடத்துதல் எவ்வாறு கையாளப்படுகிறது
வேறொரு நாட்டில் முறையான கைது வாரண்ட் அல்லது குற்றச்சாட்டுகள் ஒருவருக்கு எதிராக இருந்தால், நியூசிலாந்து அரசாங்கம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ நடைமுறைகளின் மூலம் நாடுகடத்துதலைக் கையாள்கிறது. நாடுகடத்தும் செயல்முறையின் ஒரு பகுதியாக, வெளிநாட்டு அதிகாரிகள் நியூசிலாந்தில் உள்ள ஒருவரைக் கைது செய்யவோ, தடுத்து வைக்கவோ அல்லது அணுகவோ முடியாது.
உதவி பெற அணுக வேண்டிய இடங்கள்
சட்டப் பிரதிநிதித்துவம் மற்றும் ஆலோசனை
நாடுகடத்தும் நடைமுறைகளை அரசாங்கத் துறைகள் கையாளுகின்றன, ஆனால் அவற்றால் தனிநபர்களுக்குச் சட்ட ஆலோசனைகளை வழங்க முடியாது.
இதன் பொருள், நாடுகடத்தல் கோரிக்கையை எதிர்கொள்ளும் எவரும் நாடுகடத்தல், மனித உரிமைகள் மற்றும் சர்வதேசச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு வழக்கறிஞரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
யூசிலாந்தில் கிடைக்கும் சட்ட ஆதரவு குறித்த கூடுதல் தகவல்களை இங்கே அறியலாம்.